| ADDED : டிச 04, 2025 05:48 AM
துமகூரு: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் சிற்றுண்டி ஆலோசனை கூட்டத்தை பற்றி, காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து, துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதலில் பெண்ணை பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வருவர். அதன்பின் மாப்பிள்ளை வீட்டை பார்க்க, பெண் வீட்டார் வருவர். அதே போன்று, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின்பிரேக்பாஸ்ட் மீட்டிங் உள்ளது. இப்போது என்ன இருக்கிறதோ, அதுவே இனியும் தொடரும். எந்த மாற்றமும் நடக்காது. கிராமங்களில் அமைதி நிலவ வேண்டும் என்றால், ஆடு, கோழி பலி கொடுப்பர். அது போன்று, நாட்டு கோழி விருந்துடன், பிரேக்பாஸ்ட் மீட்டிங் நடந்துள்ளது. தலைமை மாற்றம் நடக்காது என நாங்கள் நினைக்கிறோம். மாற்றம் இருந்தால், மேலிட தலைவர்கள் கூறுவர். கட்டாயத்தின் பேரில், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா நீக்கப்பட்டால், தலித் சமுதாயத்தின் பரமேஸ்வர் முதல்வராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.