உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காட்டு யானை தாக்கி கல்லுாரி மாணவி பலி

 காட்டு யானை தாக்கி கல்லுாரி மாணவி பலி

குடகு: வீட்டு வாசலில் பைக்கில் இருந்து இறங்கிய மாணவியை, பெற்றோரின் கண் முன்னால், காட்டு யானை மிதித்து கொன்றது. குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் பெட்டத்துார் கிராமத்தில் வசித்தவர் பூஜா, 17. இவர் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்து வருகிறார். நேற்று முன் தினம் தேர்வு எழுதியிருந்தார். இவரது வீட்டில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை அவ்வப்போது நடமாடியது. கிராமத்தினர் பயத்துடன் நடமாடினர். இந்நிலையில் பூஜாவும், தாய், தந்தையும் ஒரே பைக்கில் நேற்று முன் தினம் வெளியே சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தனர். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியதும், தாய் தேவகி இறங்கி உள்ளே சென்றார். பூஜாவை இறக்கி விட்ட தந்தை செங்கப்பா, பைக்கை நிறுத்த சிறிது துாரம் சென்றார். அப்போது பூஜா, இருளில் தனக்கு பின்னால் காட்டு யானை வந்ததை கவனிக்காமல், வீட்டுக்குள் செல்ல முற்பட்டார். அவரை யானை தாக்கி கீழே தள்ளியது. இதை பார்த்து தாய் அலறினார். சத்தம் கேட்டு தந்தை ஓடி வருவதற்குள், யானை பூஜாவை மிதித்து கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றது. சம்பவம் நடந்த இடத்தை, வனத்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால், கிராமத்தினர் கோபம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள், மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ