பலாத்காரம் சிறிய விஷயம் தான் காங்கிரஸ் எம்.பி., சர்ச்சை பேச்சு
கொப்பால்: வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை சிறிய விஷயம் என்று கூறிய, காங்கிரஸ் எம்.பி., ராஜசேகர் ஹிட்னாலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொப்பால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கொப்பால் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ராஜசேகர் ஹிட்னால் பேசுகையில், ''கொப்பாலுக்கு கடந்த ஆண்டு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சிறிய விஷயம் பெரிதாக பேசப்பட்டது. இதனால், கொப்பாலில் சுற்றுலா செல்வது பாதுகாப்பு அல்ல என்ற எண்ணம், வெளிநாட்டு பயணியரிடம் தோன்றியது. இதனால், மாவட்ட சுற்றுலாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது; உடன் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையறிந்த ராஜசேகர், பாலியல் சம்பவம் பெரிய சம்பவம் தான் என, விளக்கம் அளித்தார். இருப்பினும், பெண்கள் அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை: பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை, காங்கிரஸ் எம்.பி., ராஜசேகர் சிறிய விஷயம் என்று கூறுகிறார். அவரது கருத்துக்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதையே காட்டுகின்றன. பாலியல் வன்கொடுமை, கொலை எல்லாம், சிறிய விஷயம் என்றால், எது தான் பெரிய விஷயம். காங்கிரஸ் ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற அறிக்கைகள் பெண்கள் பாதுகாப்பை கேள்வி குறியாக்குகிறது. பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை சிறிய விஷயம் என கூறுபவரின் மனநிலை எப்படி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.