உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கட்டட தொழிலாளர்களுக்கு மதியம் ஓய்வு கொடுக்க உத்தரவு

 கட்டட தொழிலாளர்களுக்கு மதியம் ஓய்வு கொடுக்க உத்தரவு

மாண்டியா: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், கட்டட தொழிலாளர்களுக்கு மதிய நேரம் ஓய்வளிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால், கட்டட உரிமையாளர்கள் மீதுநடவடிக்கை எடுப்பதாக, மாண்டியா மாவட்ட தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு: மாண்டியா மாவட்டத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் தீயாய் கொளுத்துகிறது. அந்த நேரத்தில் வெயிலில் பணியாற்றுவதால், கட்டட தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதை தவிர்க்கும் வகையில், மதியம், 1:00 முதல், 3:00 மணி வரை, கட்டட தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஓய்வு கொடுக்க வேண்டும். வெயிலில் பணியாற்றுவோருக்கு, மயக்கம், ஹீட் ஸ்ட்ரோக், இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். எனவே, ஒப்பந்ததாரர்கள், கட்டட உரிமையாளர்கள் தங்களிடம் பணியாற்றும் கட்டட தொழிலாளர்களை வெயிலில் வேலை செய்ய விடக்கூடாது. அவர்களுக்கு ஓய்வு அளிப்பதுடன், குடிநீர், கழிப்பறை வசதியும் செய்து தர வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயம். இந்த உத்தரவை மீறினால், ஒப்பந்ததாரர்கள், கட்டட உரிமையாளர்களுக்கு சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும். தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுக்கா விட்டால், மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. அவ்வப்போது விதிமுறைகளை மீறினால், சிறை தண்டனை மற்றும் அபராதம் அதிகரிக்கும். பணியின் போது, வெப்பத்தால் தொழிலாளர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அல்லது உயிரிழந்தால், அதற்கு கட்டட உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டி வரும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ