உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜி.பி.ஏ., தேர்தலில் தனித்து போட்டி? ம.ஜ.த., குமாரசாமி விளக்கம்

 ஜி.பி.ஏ., தேர்தலில் தனித்து போட்டி? ம.ஜ.த., குமாரசாமி விளக்கம்

பெங்களூரு: ஜி.பி.ஏ., தேர்தலில் ம.ஜ.த., தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும், 120 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் தேசிய கட்சியான பா.ஜ.,வுடன், மாநில கட்சி ம.ஜ.த., கூட்டணியில் உள்ளது. முதற்கட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இருந்தாலும், இரண்டாம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் இடையில் பிரச்னை உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று, பா.ஜ., தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட 5 மாநகராட்சிகளின் 369 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜி.பி.ஏ., தேர்தலில் பா.ஜ.,விடம் 80 முதல் 120 வார்டுகளை கேட்க, ம.ஜ.த., தயாராகி வருகிறது. தங்கள் கேட்கும் வார்டுகள் கிடைக்காத பட்சத்தில், ம.ஜ.த., தனித்து போட்டியிடவும், 120 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கட்சி தலைவர்கள், தொண்டர்களுடன், மத்திய அமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: ஜி.பி.ஏ., தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. சரியான நேரத்தில் பேசுவோம். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அந்த தேர்தல் பற்றி பின்னர் பேசுவோம். மாண்டியா, ஹாசன் பா.ஜ., தலைவர்கள் சிலர், எங்களுடனான கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். தனி நபர்கள் விமர்சனங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். மாநிலத்தில் உள்ள ஊழல் அரசை அகற்ற வேண்டும் என்பது எனது குறிக்கோள். நான் முதல்வர் ஆவது பற்றி பின்னர் முடிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ