மத்திய பட்ஜெட் குறித்து தேவகவுடா புகழாரம்
'மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026 - 27ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், ' ' என ராஜ்யசபா ம.ஜ.த., - எம்.பி., தேவகவுடா தெரிவித்தார். மத்திய பட்ஜெட் தொடர்பாக, ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தில், தேவகவுடா பங்கேற்று பேசியதாவது: சென்னை - பெங்களூரு; ஹைதராபாத் - பெங்களூரு இடையிலான முக்கியமான துறைமுகங்கள் கொண்டுள்ள, தொழில் காரிடார் திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை, வரவேற்கிறேன். அதே போன்று, பெங்களூரில் இருந்து, மங்களூரு வரை தொழில் காரிடாரை விஸ்தரித்தால், தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவு ம். மங்களூரும் கூட, முக்கியமான துறைமுக நகரம்தான். விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மங்களூரு துறைமுகங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தினால், தேசிய அளவிலான தொழில் மேம்படும். தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் விளைவிக்கப்படும் பலா, புளி, நாவல் பழத்துக்கு ஊக்கமளிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். இம்மூன்று விளைச்சல்களும், மருத்துவ குணங்கள் கொண்டவை. தென்னகத்தில் அதிகம் விளைகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சி ங் சவுஹான், ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறேன். இம்முறை பட்ஜெட்டில், தொழில் மேம்பாட்டுக்கு அடிப்படை வசதிகள், ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவது என, பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முதலீட்டை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தை பட்ஜெட்டில், அழுத்தமாக கூறியுள்ளனர். மக்களின் நலனுக்காக, வரி நடைமுறை எளிமையாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. வரிதாரர்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியம். தேங்காய், சந்தனம், முந்திரிப்பருப்பு உட்பட, மற்ற வர்த்தக விளைச்சல்களுக்கு ஊக்கமளித்தது நல்ல விஷயம். இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -: '