உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இல்லாத யானைகளை தேடிய வனத்துறையினர்

 இல்லாத யானைகளை தேடிய வனத்துறையினர்

கனகபுரா: வனத்தில் இருந்து 40 காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்ததாக வெளியான வீடியோவால், வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, யானைகளை தேடிவிட்டு சோர்வுடன் திரும்பினர். ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின் கொளகொன்டனஹள்ளி கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட காடுஷிவனஹள்ளி கிராமத்தில், 40 காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளன. மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் பரிதவிப்பதாக, நேற்று முன்தினம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், கிலியடைந்த விவசாயிகள், காட்டு யானைகள் அதிக எண்ணிக்கையில் கிராமத்துக்குள் நுழைந்துள்ளன. கிராமத்தை சுற்றிலும் நடமாடுகின்றன. அவற்றை விரட்டுங்கள்; இல்லையென்றால் அபாயம் ஏற்படும் என்று மன்றாடினர். வனத்துறை ஊழியர்களும் கிராமத்துக்கு விரைந்து சென்று, யானைகளை தேட துவங்கினர். கர்நாடக எல்லைப்பகுதி வரை தேடி அலைந்தும், ஒரு யானையும் கண்ணில் தென்படவில்லை. யானைகள் நடமாடுவதற்கான அடையாளமே இல்லை. மாலை வரை தேடி சோர்வடைந்த வனத்துறையினர், யானைகள் நடமாடிய வீடியோவை ஆய்வு செய்த போது, அது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது. அதன்பின் கிராமத்தினரிடம், 'யானைகள் ஊருக்குள் வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு, 40 யானைகள் கூட்டமாக வந்தன. அப்போது இதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர். மக்களை பீதியில் ஆழ்த்தும் நோக்கில், இப்போது அந்த பழைய வீடியோவை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என, தைரியம் கூறினர். அதன்பின் மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை