பதவியில் இருந்து இறக்கினால் ராஜினாமா செய்வேன்: ஹொரட்டி
உத்தரகன்னடா: ''என்னை பதவியில் இருந்து, கீழே இறக்க காங்கிரஸ் அரசு முயற்சித்தால், நானாகவே ராஜினாமா செய்வேன்,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். உத்தரகன்னடா, சிர்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: மேல்சபையில் இதற்கு முன், எந்த கட்சிகளின் உறுப்பினர் பலம் அதிகரித்த போதும், மேல்சபை தலைவர் மாற்றப்படவில்லை. ஏற்கனவே இருந்தவரே தலைவராக நீடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், என் பதவியை பற்றிய கலக்கம் இல்லை. என்னை பதவியில் இருந்து கீழே இறக்க முயற்சித்தால், உடனடியாக ராஜினாமா செய்வேன். ஒரு ஆண்டோ அல்லது 10 ஆண்டுகளோ மேல்சபை தலைவராக இருந்தாலும், பதவிக் காலம் முடிந்த பின், 'மாஜி' என்று தான் குறிப்பிடுவர். இதற்கு முன்பு கட்சியின் உறுப்பினர் பலம் அதிகரித்தபோது, உக்ரப்பா, சங்கரமூர்த்தி ஆகியோரை பதவியில் இருந்து இறக்கினர். இன்று மேல்சபை மட்டுமின்றி, எங்குமே மதிப்பு இல்லை. அது, ராமகிருஷ்ண ஹெக்டே காலத்திலேயே முடிந்துவிட்டது. இப்போது பணம் கொடுத்து, ஓட்டு வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.