கர்நாடகாவில் வெயில் அதிகரிப்பு மண் பானை விற்பனை அமோகம்
பெங்களூரு: பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், மக்கள் தவிக்கின்றனர். குளிர்ச்சியாக தண்ணீர் ஊற்றி வைக்க, மண் பானைகள் வாங்குகின்றனர். இதனால், பானைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் பல மாவட்டங்களில், வெப்பநிலை, 40 டிகிரி செல்சியஷை எட்டியுள்ளது. பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அதிகமான வெயில் வாட்டுகிறது. மக்கள் குளிர் பானங்கள், இளநீர், மோர், பழ ரசங்கள் அருந்தி, வெப்பத்தில் இருந்து தப்புகின்றனர். பொதுவாக கோடைகாலத்தில், மண் பானைகளின் பயன்பாடு அதிகரிக்கும். அதேபோன்று இம்முறையும், பல வீடுகளில் மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர். இதில், தண்ணீர் ஊற்றி வைத்தால், குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், பானைகளின் தேவை அதிகரித்துள்ளது. வெவ்வேறு அளவில் பானைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. இதை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் மட்டுமின்றி, பல்வேறு வண்ணங்களில் தம்ளர்கள், பாட்டில்களும் கூட, விற்பனைக்கு வந்துள்ளன. மண் பானைகள் 300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பெங்களூரின் பல இடங்களில் சாலை ஓரங்கள், தள்ளு வண்டிகளில் மண் பானைகள் விற்பனையாகின்றன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.