ஐந்து இதய மருத்துவமனைகள் ஜெயதேவா இயக்குநர் விருப்பம்
பெங்களூரு: ''புதிதாக உருவாக்கப்பட்ட பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளிலும் இதய மருத்துவமனை ஏற்படுத்த அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்,'' என, ஜெயதேவா இதய மருத்துவமனை் இயக்குநர் டாக்டர் பி.தினேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஜெயதேவா இதய மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க, பிற மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாநகரட்சிகளிலும் தலா ஒன்று வீதம் ஐந்து சிறிய அளவிலான இதய மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். அப்போது, தான் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். இந்த மருத்துவமனைகள் ஜெயதேவாவின் துணை மருத்துவமனைகளாக செயல்படும். இந்த மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இரவு 8:00 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். அவசர சிகிச்சை வார்டுகள் 24 மணி நேரமும் செயல்படும். இந்த மருத்துவமனைகள் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாநில அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். இது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க உள்ளேன். ஜெயதேவ இதய மருத்துவமனையில் 15 சதவீதம் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இந்த பதவிகளில் விரைவில் செவிலியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.