உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சர் பதவிக்கு போட்டி; கார்கேவுக்கு கடும் தலைவலி

 அமைச்சர் பதவிக்கு போட்டி; கார்கேவுக்கு கடும் தலைவலி

பெங்களூரு: 'எங்களில் 5 பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று, காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் 26 பேர் திடீரென போர்க்கொடி துாக்கி உள்ளனர். தங்கள் கோரிக்கையை கடிதமாக, மல்லிகார்ஜுன கார்கேயிடம் சமர்ப்பித்து உள்ளனர். அமைச்சர் பதவி விவகாரத்தால் அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையா, சிவகுமார் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இவர்களின் பிரச்னையை தீர்த்து வைக்க முடியாமல் கட்சி மேலிடம் விழிபிதுங்கி நிற்கிறது. இதற்கு மத்தியில் முதல்முறை எம்.எல்.ஏ.,க்கள் ஆன காங்கிரசின் 38 பேர், தங்களில் யாராவது 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, கட்சி மேலிடத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் 24 பேர் டில்லிக்கு சென்று மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்தனர். 24 பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினர். தங்களில் யாராவது 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கார்கேயிடம் கோரிக்கை வைத்தனர். கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: அமைச்சரவையில் எம்.எல்.சி.,க்கள் யாரும் இல்லாதது சமத்துவமின்மையை ஏற்படுத்தி உள்ளது. எங்களை ஒதுக்கி வைத்தது போன்று உணருகிறோம். எம்.எல்.சி.,யாக இருந்தால் அமைச்சர் பதவி கிடைக்காது என்று நினைத்து திறமையான தலைவர்கள் கூட, எம்.எல்.ஏ., சீட் கேட்கலாம். இது கட்சியில் தேவையில்லாத கோஷ்டி மோதலை உருவாக்கும். கடந்த 1907ம் ஆண்டு கர்நாடக மேல்சபை நிறுவப்பட்டது. நாட்டிலேயே மிக பழமையான அமைப்பாக உள்ளது. மேல்சபையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள், கலை, சினிமா துறையில் சாதனை படைத்தவர்கள். எங்களை மக்கள் எளிதில் அணுகுகின்றனர். எம்.எல்.ஏ.,க்களுக்காக நாங்கள் பிரசாரம் செய்கிறோம். இதனை எல்லாம் பரிசீலித்து, அமைச்சர் பதவி வழங்குங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி கொடுக்கும் நேரத்தில், எம்.எல்.சி.,க்களும் கோதாவில் குதித்து இருப்பது, கார்கேவுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி