உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அடிப்படை வசதிகள் இல்லாத குக்கே சுப்ரமண்யா கோவில்

 அடிப்படை வசதிகள் இல்லாத குக்கே சுப்ரமண்யா கோவில்

மங்களூரு: ஆண்டுதோறும், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் பெறும், குக்கே சுப்ரமண்யா கோவிலில் சரியான அடிப்படை வசதிகள் இல்லாமல், பக்தர்கள்திண்டாடுகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற தாகும். கர்நாடகாவின் பணக்கார கோவில்களில், இதுவும் ஒன்றாகும். தோஷங்களை நிவர்த்தி செய்யும் திருத்தலம் என்பதால், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளி நாடுகளில் இருந்தும் வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால்,வருவாயும் அதிகரிக்கிறது. ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில், தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. 17 ஆண்டுகளுக்கு முன், கோவில் மேம்பாட்டுக்கு 604 கோடி ரூபாய் செலவில், திட்டம் வகுக்கப்பட்டது. ரத வீதி சீரமைப்பு, 800 அறைகள் கொண்ட தங்கும் விடுதி, கழிப்பறை, விருந்தினர் இல்லம் உட்பட பல பணிகள் நடத்ததிட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. தற்போது கோவிலில் தினமும் 175 பக்தர்களுக்கு மட்டுமே, சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை செய்ய அனுமதி உள்ளது. அதிகமானோருக்கு இட வசதி இல்லை. கோவிலுக்கு போதுமான வருவாய் உள்ளது. ஆனால் இந்த பணத்தை செலவிட்டு, கோவிலை மேம்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை என, பக்தர்கள் அதிருப்திதெரிவித்துள்ளனர். அதேபோன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி இல்லை. ரத வீதியில் படுத்துறங்கும் சூழ்நிலை உள்ளது. இம்முறை பட்ஜெட்டில் குக்கே சுப்ரமண்யா கோவில் மேம்பாட்டு ஆணையம் அமைப்பதாக, அரசு அறிவித்துள்ளது. இனியாவது அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !