அநீதி இழைத்தவர்களை மஞ்சுநாதர் கவனிப்பார்
ஹாசன் : ''ஹாசனுக்கு அநீதி இழைத்தவர்களை மஞ்சுநாதர் கவனித்துக் கொள்வார்,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா தெரிவித்துள்ளார். ஹாசன் ஹொளேநரசிபுரா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா அளித்த பேட்டி: ஹாசன் மாவட்டத்திற்கு அநீதி இழைத்தவர்களை மஞ்சுநாதர் கவனித்துக் கொள்வார். இதுவரை மாவட்டத்தின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்டுள்ளேன். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக கடுமையாக உழைத்து உள்ளேன். ஆனால், இந்த வளர்ச்சிக்கு சிலர் தடையாக உள்ளனர். அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். ஹாசனில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஏழைகளிடம் பணத்தை அதிகமாக வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனையில் பல வசதிகள் இருந்தாலும், மக்கள் அங்கு சென்று சிகிச்சை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஹொளேநரசிபுரா தொகுதியில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்காக, விண்ணப்பங்கள் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், வீடுகள் கட்டித்தர அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.