உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போலீஸ்காரர்களை தாக்கிய அமைச்சர் ஆதரவாளர் கைது

 போலீஸ்காரர்களை தாக்கிய அமைச்சர் ஆதரவாளர் கைது

தாவணகெரே: சண்டையை விலக்கி விட சென்ற போலீஸ்காரர்களை தாக்கிய அமைச்சர் மல்லிகார்ஜுன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். கர்நாடக தோட்டக்கலை துறை அமைச்சர் மல்லிகார்ஜுன். தாவணகெரே மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். இவரது ஆதரவாளர் அயூப் பயில்வான். இவரின் மகன்களான ஹசன், 30, ஹுசைன், 28, அமைச்சரின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அயூப் பயில்வான் வீட்டின் முன்பு, ஒரு சமூகத்தை சேர்ந்த இரு பிரிவு வாலிபர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக ஹசனும், ஹுசைனும் செயல்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த எஸ்.ஐ., காயத்ரி, போலீஸ்காரர்கள் ஹரிஷ், கெஞ்சப்பா ஆகியோர், சண்டையை விலக்கி விட முயன்றனர். ஆத்திரம் அடைந்த ஹசனும், ஹுசைனும், எஸ்.ஐ., காயத்ரியிடம் வாக்குவாதம் செய்து, அவரது கையை பிடித்து இழுத்தனர். அவரை பாதுகாக்க முயன்ற போலீஸ்காரர்கள் இருவரையும் தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. எஸ்.ஐ., காயத்ரி அளித்த புகாரில் ஹசன் கைது செய்யப்பட்டார். ஹுசைன் தலைமறைவாக உள்ளார். மோதலில் ஈடுபட்ட மேலும் 8 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இந்த வழக்கு குறித்து அமைச்சர் மல்லிகார்ஜுன் கூறுகையில், ''சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். போலீஸ்காரர்களை தாக்கிய எனது ஆதரவாளர்களை காப்பாற்ற முன்வர மாட்டேன். இந்த வழக்கில் பா.ஜ., அரசியல் செய்கிறது. இரு சமூகங்கள் இடையில் சண்டையை துாண்டி விட முயற்சி செய்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை