சுற்றுலா பயணியரின் குளிர்பானத்தை பறித்து குடித்த குரங்குகள்
மைசூரு: வெயிலின் தாக்கத்தால், சாமுண்டி மலையில் பக்தர்கள் கையில் வைத்திருக்கும் குளிர்பான பாட்டில்களை, குரங்குகள் பறித்து அதிலுள்ள குளிரபானம், தண்ணீரை குடிக்கின்றன. கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் வாட்டி வதைக்கின்றன. மைசூரு சாமுண்டி மலையில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பிள்ளைகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், பலர் இன்ப சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா புறப்பட்டு உள்ளனர். முன்னர், மைசூரு சாமுண்டி மலைக்கு படிக்கட்டு வழியாக வரும் பக்தர்களின் கை, பையில் உள்ள தின்பண்டங்களை பறித்து வந்தன. தற்போது, வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாத குரங்குகள், படிக்கட்டு வழியாக ஏறும் சுற்றுலா பயணியரின் கையில் இருக்கும் குளிர்பானம், தண்ணீர் பாட்டில்களை பறிக்க துவங்கி உள்ளன. மனிதர்கள் போன்று குளிர்பான மூடியை திறந்து, படிக்கட்டுகள், படிக்கட்டு தடுப்பு சுவர், மலையின் பாறைகள் மீது அமர்ந்து குடிக்கின்றன. குடித்து முடித்த பின், அடுத்த 'இரை'யை தேடி ஓடுகின்றன. குரங்குகள் தங்களை நோக்கி வருவதை பார்க்கும் சுற்றுலா பயணியர், தாமாகவே முன்வந்து, குளிர்பான பாட்டிலை கொடுத்துவிடுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து, அவரவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.