வெறுப்பு பேச்சு தடை மசோதா தேவையில்லை: மாநில அரசுக்கு பின்னடைவு
பெங்களூரு: கர்நாடகாவின், வெறுப்பு பேச்சு தடை மசோதாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. கடந்தாண்டு பெலகாவியில் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில், வெறுப்பு பேச்சு தடை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., எதிர்ப்பு தெரிவித்தன. அந்த மசோதா, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை கவர்னர் ஏற்கவில்லை. இதையடுத்து, மாநில அரசு, மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. அப்போதும், ஏற்க மறுத்த கவர்னர், கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பினார். அதை, அவர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை ஏற்க மறுத்து, கர்நாடக அரசுக்கு திருப்பி அனுப்பியது. அந்த குறிப்பிட்டுள்ளதாவது: இந்த விவகாரம் சி.எஸ்., எனும் மத்திய - மாநில பிரிவில் ஆராயப்பட்டது. இது போன்ற சட்டங்கள், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் - 2023 மற்றும் பிற தற்போதைய சட்டங்களின் கீழ் உள்ளன. இச்சூழ்நிலையில், மாநில அரசு, ஒரு தனி சட்டத்தை அறிமுகப்படுத்துவதால், தேவையற்ற, குழப்பம் ஏற்படும். பிரச்னைகளை தீர்க்க தற்போதுள்ள சட்டமே போதுமானது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.