உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பனசங்கரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

 பனசங்கரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

பனசங்கரி: பனசங்கரி குடியிருப்பு பகுதியில் தெரு நாயை, சிறுத்தை ஒன்று பிடித்து செல்லும் வீடியோ பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெங்களூரு பனசங்கரி ஆறாவது பேசில் நேற்று அதிகாலை, தெரு நாய் ஒன்றை, சிறுத்தை துாக்கி செல்லும் காட்சி அங்கிருந்த கண்காட்சி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பனசங்கரி அருகில் துரஹள்ளி வனப்பகுதி உள்ளதால், அங்கிருந்து உணவு தேடி வந்த சிறுத்தை, நாயை இழுத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, பனசங்கரி குடியிருப்போர் நல சங்கத்தினர், சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: இதே பகுதியில் கடந்த ஜன., 19ம் தேதி மயிலை வேட்டையாடிய சிறுத்தை, அதனை வனப்பகுதிக்குள் இழுத்து செல்வதை பலர் பார்த்து உள்ளனர். அது தவிர, கார்யானபாளையாவில் விவசாயிகளின் ஆடு, கோழிகளையும் துாக்கி சென்றுள்ளன. தற்போது சிறுத்தையின் தாக்குதலுக்கு தெரு நாய்கள் பலியாகி வருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே பெங்களூரு தெற்கு எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா மற்றும் வனத்துறையிடம் முறையிட்டு உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதி எல்லையில் குறைந்தபட்சம் 10 அடி உயரத்துக்கு சுவர் கட்ட வேண்டும். அதன் மேல் பகுதியில் இரும்பு வேலி அமைக்க வேண்டும். வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து இரவு நேரத்தில் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ