ரயில் தண்டவாளம் மீது பழுதடைந்து நின்ற பஸ் உயிர் தப்பிய பயணியர்
பெங்களூரு: ஆனேக்கல் அருகேயுள்ள ரயில்வே கேட்டில், பி.எம்.டி.சி., பஸ் ஒன்று பழுதடைந்து ரயில் தண்டவாளம் மீது நின்றதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல்லில் இருந்து பி.எம்.டி.சி., பஸ் ஒன்று, நேற்று காலை பயணியரை ஏற்றிக்கொண்டு அத்திப்பள்ளிக்கு புறப்பட்டது. ஆனேக்கல் அருகேயுள்ள ரயில்வே கேட்டை கடக்கும் போது, பஸ்சில் கோளாறு ஏற்பட்டு, தண்டவாளத்தின் மீது நின்று விட்டது. தண்டவாளத்தில் பஸ் நின்றதால், பயணியர் அலறியடித்தபடி கீழே இறங்கினர். அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் வராததால், நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் பஸ் நின்றது குறித்து, அருகேயுள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணியர் மாற்று வாகனங்களில் சென்று விட்டனர். பி.எம்.டி.சி., ஓட்டுநர், மெக்கானிக்கை வரவழைத்து பஸ்சை சரி செய்து, அங்கிருந்து புறப்பட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக பஸ் ஒரே இடத்தில் நின்றிருந்ததால், ஆனேக்கல் - அத்தப்பள்ளி சாலையில், பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 'பி.எம்.டி.சி., பஸ்கள் சரியாக நிர்வகிக்கப்படுவது இல்லை. பழைய பஸ்களை இயக்கி மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்பது அடிக்கடி நடக்கிறது' என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். ரயில் தண்டவாளத்தின் மீது பஸ் நின்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.