அரசு அலுவலக நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை
பெங்களூரு: மாநிலம் முழுவதும், அனைத்து அரசு அலுவலகங்கள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் பேசியதாவது: மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், ஆலோசனை கூட்டங்களுக்கு, அரசு சார்ந்த கே.எம்.எப்.,பின் நந்தினி பிராண்ட் தின்பண்டங்களை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இந்த உத்தரவை, அமைச்சக அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இனி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த கூடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களால் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.