சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும் பள்ளி இயங்க உத்தரவு
பெங்களூரு: 'கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள், அனைத்து சனிக்கிழமைகளிலும் முழு நாள் இயங்கின. தங்கள் விருப்பப்படி பள்ளி நேரத்தை மாற்றியமைத்தன. பெங்களூரில் உள்ள சில பள்ளிகள், காலை 7:00 மணிக்கே துவக்கப்பட்டன. இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் சிரமப்பட்டனர். இவ்விஷயத்திற்கு தீர்வு காணும் வகையில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகாவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் என அனைத்து பள்ளிகளிலும், சனிக்கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை என அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த முடிவு மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.