உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமெரிக்க தம்பதி வீட்டில்  திருடிய வேலைக்காரர் கைது

 அமெரிக்க தம்பதி வீட்டில்  திருடிய வேலைக்காரர் கைது

ஜீவன்பீமாநகர்: பெங்களூரில் வசிக்கும் அமெரிக்க தம்பதியின் வீட்டில் திருடிய, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வேலைக்காரர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் டாம்மோ கங்கானியன். இவரது மனைவி மெரியல் மொரேனோ. இவர்கள் இருவரும் பெங்களூரு ஜீவன்பீமாநகரில் வில்லாவில் வசிக்கின்றனர். ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். சொந்த வேலையாக டாம்மோ, அமெரிக்கா சென்று உள்ளார். மெரியல் மட்டும் வீட்டில் தனியாக வசிக்கிறார். கடந்த 21ம் தேதி காலை வேலைக்கு சென்ற மெரியல், மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வைர நகைகள், 600 அமெரிக்க டாலர் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து வீட்டில் வேலை செய்த, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வேலைக்காரர் சந்தன் ரவுல், 37 என்பவரிடம் கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். வீட்டில் திருட்டு நடந்தது பற்றி அமெரிக்காவில் உள்ள கணவருக்கு, மெரியல் தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக பெங்களூரில் உள்ள அமெரிக்க துாதரகத்திற்கு தகவல் கொடுத்தார். துாதரகத்தில் இருந்து டி.ஜி.பி.,க்கு நேரடியாக புகார் செய்யப்பட்டது. அந்த புகாரை ஜீவன்பீமாநகர் போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தின்படி, சந்தன் ரவுலிடம் விசாரித்த போது, நகை, பணத்தை திருடியதையும், சுதமாநகரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதையும் ஒப்பு கொண்டார். அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், 176 கிராம் எடையுள்ள வைரம், தங்க நகைகள், இந்திய மதிப்பில் 39,000 ரூபாய் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு 1 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை