உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திருட்டை கண்டுபிடித்த மென்பொறியாளர்

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திருட்டை கண்டுபிடித்த மென்பொறியாளர்

பெங்களூரு: மென்பொறியாளர் ஒருவர், தன் சமையல் அறையில் நடந்த திருட்டை கண்டுபிடிக்க, ஏ.ஐ., தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார். சமீப நாட்களாக, அனைத்து துறைகளிலும், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. போலீசாரும், போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டுபிடிக்க, இதே தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். தற்போது பெங்களூரின் ஏ.ஐ., தொழில்நுட்ப வல்லுநர் பங்கஜ் என்பவர், இத்தகைய கேமராவை பொருத்தி, தன் வீட்டில் நடந்த திருட்டை கண்டுபிடித்தார். இதுகுறித்து, சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: என் வீட்டில் சமையல் அறையில், அவ்வப்போது பொருட்கள் திருடு போயின. பிரிட்ஜில் வைத்துள்ள பழங்களும் மாயமாகின. இதைக் கண்டுபிடிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் கொண்ட கேமராவை நானே உருவாக்கி, சமையல் அறையில் வைத்திருந்தேன். இது, எனக்கு திருடர்களை கையும், களவுமாக காட்டிக் கொடுத்தது. நான் சமையலுக்கு நியமித்திருந்த பெண்ணே, பொருட்களை திருடியுள்ளார். அவரை பணியில் இருந்து நீக்கினேன். அதற்கு முன், அவர் திருடுவதை தவிர்க்கும் நோக்கில், அவருக்கு தேவையான பொருட்களை நானே கொடுத்தேன். அப்போதும், அவர் திருடுவதை நிறுத்தவில்லை. தேவையான பொருட்களை என்னிடம் அனுமதி கேட்டு எடுத்துக் கொள்வதில், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. திருடுவதை என்னால் சகிக்க முடியாது. நான் தயாரித்த ஏ.ஐ., வாரம் ஒரு முறை, எனக்கு அறிக்கை அளிக்கும். திருட்டு மட்டுமின்றி, சமையல் செய்வதற்கு முன், பணியாட்கள் தங்களின் கைகளை சுத்தம் செய்து கொண்டார்களா, சமையல் முடிந்த பின், அறையை சுத்தம் செய்தார்களா என்பதை பரிசீலித்து, எனக்கு தகவல் தரும் வகையில் பயிற்சி அளித்துள்ளேன். வரும் நாட்களில் காஸ் கசிவு, காஸ் காலியாகும் நேரத்தை நிர்ணயித்து கூறும் திறன்களும், ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் சேர்க்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ