உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தனியார் கல்லுாரி விடுதியில் மாணவர்கள் வாந்தி, மயக்கம்

தனியார் கல்லுாரி விடுதியில் மாணவர்கள் வாந்தி, மயக்கம்

கோலார்: தனியார் கல்லுாரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. அனைவருக்கும் கோலார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோலாரின் பசவனத்தா என்ற இடத்தில் உள்ள விஸ்வ ஜோதி தனியார் கல்லுாரி மாணவர் விடுதியில் செவ்வாய் கிழமை இரவு இட்லி, தோசை, கடலை சட்னி வழங்கி உள்ளனர். இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோலாரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவ அதிகாரி ஜெகதீஷ் கூறுகையில், ''செவ்வாய் கிழமை இரவில், மாணவர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த மாணவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் நலமாக உள்ளனர். சிகிச்சைக்கு பின், நேற்று அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்,'' என்றார். மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''பசவனத்தா விஸ்வ ஜோதி தனியார் கல்லுாரி விடுதி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ