உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  3ம் வகுப்பு மாணவரை ஒயரால் சரமாரியாக அடித்த ஆசிரியை

 3ம் வகுப்பு மாணவரை ஒயரால் சரமாரியாக அடித்த ஆசிரியை

ராய்ச்சூர்: சரியாக படிக்காத மூன்றாம் வகுப்பு மாணவரை, ஒயரால் அடித்த கவுரவ ஆசிரியைக்கு கண்டனங்கள் குவிகின்றன. ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்காவின் கலகா கிராமத்தில் அரசு உருது பள்ளி உள்ளது. இங்கு, அதே கிராமத்தை சேர்ந்த, 8 வயதான மூன்றாம் வகுப்பு மாணவர் படித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் பாடம் படிக்கவில்லை; கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் கோபமடைந்த கவுரவ ஆசிரியை ஹர்ஷியா டாஸ்கின், தன் கையில் இருந்த ஒயரால் மாணவரின் கை, கால், முதுகில் சரமாரியாக அடித்தார். அடிபட்ட இடத்தில் மாணவருக்கு வீக்கம் ஏற்பட்டது. வலியால் துடித்த மாணவரை, கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் சுகாதார மையத்துக்கு வந்தனர். மகனின் நிலையை பார்த்த பெற்றோர், அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களும், கிராமத்தினரும் பள்ளிக்கு சென்று, ஆசிரியையை கண்டித்து கோஷம் எழுப்பினர். 'குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியையே இப்படி நடந்து கொண்டால், அவர்களின் எதிர்காலம் என்னவாகும். படிக்கவில்லை என்பதற்காக, உடல் ரீதியாக காயம் ஏற்படுத்துவது சட்ட விரோதமானது' என்றனர். தகவல் அறிந்து, அங்கு வந்த கல்வி துறை அதிகாரிகளிடம், 'சம்பந்தப்பட்ட ஆசிரியையை, பணியில் இருந்து நீக்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ