உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆசிரியை தற்கொலை தலைமை ஆசிரியர் கைது

 ஆசிரியை தற்கொலை தலைமை ஆசிரியர் கைது

ராம்நகர்: ஆசிரியை தற்கொலை வழக்கில், பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராம்நகர் மாவட்டம், பிடதியில் உள்ள பசவேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளியில், கன்னட ஆசிரியையாக பணியாற்றியவர் சரஸ்வதி, 37. இவர், பள்ளியின் அருகிலுள்ள திம்மேகவுடனதொட்டி பகுதியில் வசித்து வந்தார். இவரது கணவர் வினோத் குமார், வட கர்நாடகாவில் உள்ள ஒரு பொறியியல் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தம்பதியின் மூத்த மகன், தாயார் வேலை செய்யும் பள்ளியில் படித்து வருகிறார். வீட்டுப்பாடம் செய்யாததால், வகுப்பு ஆசிரியர், அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சரஸ்வதி, பள்ளி நிர்வாகத்திடம் தட்டி கேட்டாராம். அப்போது, தலைமை ஆசிரியர், அவரை அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால், சரஸ்வதி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி சரஸ்வதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் மகனுக்கு அளிக்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை குறித்து கேள்வி எழுப்பியதால், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரசாந்த் லோகாரேவும், மற்றொரு ஆசிரியரும் என்னை அவமதித்தனர்' என குறிப்பிட்டிருந்தார். சரஸ்வதி கணவர் புகாரின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு ஆசிரியர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மன உளைச்சலில் இருக்கும் நபர்களுக்கு உதவி கிடைக்க, தேசிய தற்கொலை தடுப்பு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: டெலி மனஸ்: 14416 / 1800-891-4416.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி