ஆபத்தை உணராமல் ஸ்கூட்டரில் பயணித்த மூன்று வாலிபர்கள்
பி.டி.எம்.: மது அருந்தியவாறு ஒரே ஸ்கூட்டரில் மூன்று வாலிபர்கள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் பி.டி.எம்., லே - அவுட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரே ஸ்கூட்டரில் மூன்று வாலிபர்கள் செல்கின்றனர். அதில், கடைசியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் வாலிபர், ஒரு கையில் பீர் பாட்டிலுடனும், மற்றொரு கையில் சிகரெட்டுடனும் இருக்கிறார். மது அருந்தியபடி செல்வது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது போன்றவர்களால் தான் சாலையில் விபத்து நிகழ்கிறது. இவர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தற்போது, வீடியோவில் பதிவான வாகனத்தின் நம்பரை அடிப்படையாக கொண்டு போக்குவரத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.