உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / யு டியூப் பார்த்து செயின்  பறித்த இருவர் கைது 

யு டியூப் பார்த்து செயின்  பறித்த இருவர் கைது 

கோனனகுன்டே : 'யு டியூப்' பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு, வெங்கடேஸ்வரா லே அவுட் பகுதியில், கடந்த மாதம் 14ம் தேதி, நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், பைக்கில் வந்த இருவர் தங்கச் செயினை பறித்து சென்றனர். இது குறித்து கோனனகுன்டே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் பைக் எண்ணை கண்டுபிடித்தனர். விசாரணையில், இந்த பைக் பனசங்கரி பகுதியில் உள்ள பைக்குகளை வாடகைக்கு விடும் கடையில் இருந்து வாடகைக்கு பெறப்பட்டது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள், ஷிவமொக்கா பத்ராவதியின் பிரபு, 27, பெங்களூரின் நிதின், 24, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2.8 லட்சம் ரூபாய் ரொக்கமும், 1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பைக் ஆகியவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களாகிய இருவரும் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டனர். அதற்காக யு டியூப் பார்த்து தங்க செயின் பறிப்பில் ஈடுபடுவது குறித்து தெரிந்து கொண்டனர். சொந்த பைக்கை பயன்படுத்தினால், போலீசிடம் சிக்கி கொள்வோம் என்பதை உணர்ந்த இருவரும் வாடகைக்கு வண்டி எடுத்து செயின் பறிப்பில் ஈடுபட திட்டமிட்டனர்.இத்திட்டத்தை கடந்த சில மாதங்களாக செயல்படுத்தி வந்தனர். பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில், தனியாக நடந்து செல்லும் பெண்களின் செயின்களை பறித்து உள்ளதாக கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !