நிலத்தை உழுத போது கிடைத்த வேணுகோபால சுவாமி சிலை
- நமது நிருபர் -: சிக்கமகளூரு மாவட்டம், பசவனஹள்ளியில் 1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. புராணங்கள்படி, 1,200 ஆண்டுகளுக்கு முன், விவசாயிகள் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது, நிலத்தில் வேணுகோபால சுவாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த மக்கள், கிருஷ்ணருக்கு கோவில் கட்ட தீர்மானித்தனர். இதையடுத்து ஊர் தலைவர், பசு மாடு ஒன்றின் மீது சிலையை வைத்து, பசு எங்கு சென்று நிற்கிறதோ அங்கு கோவில் கட்டலாம் என்று தெரிவித்தார். ஊர் மக்களும் இதை ஏற்றுக் கொண்டனர். பசு மாடும் பல இடங்கள் நடந்து சென்று, தற்போதுள்ள பசவனஹள்ளி கிராமத்தில் நின்றது. அங்கு ஆரம்பத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டது. அதன்பின், சோழர் காலத்தில், இக்கோவில் சீரமைக்கப்பட்டது. மனமுருகி வேண்டும் வேண்டுதலை, நிறைவேற்றுவதால், கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட, பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தருகின்றனர்.