ஸ்டார்ட் அப் சூழல் மேம்பட அரசின் ஒருங்கிணைப்பு தேவை
சென்னை ' ''தமிழகத்தில், 'ஸ்டார்ட்அ ப்' சூழல் அமைப்புக்கு தேவையான உத்வேகத்தை வழங்க, மத்திய அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் மாநில அரசு பணியாற்ற வேண்டும்,'' என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், ஆராய்ச்சி, தொழில், ஸ்டார்ட் அப், தொழில்முனைவோர் மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கும் மாநாட்டில், 120 நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்குகளை அமைத்துள்ளன. மாநாட்டில் அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தற்போது 2 லட்சமாக அதிகரித்துள்ளன. இதனால், 21 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் திறன்மிக்கவர்கள் அதிகம் உள்ளனர். புத்தாக்கம் சார்ந்த தொழில்முனைவை விரைவுபடுத்த இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில், திறனுக்கு உகந்த சூழல் அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசின் வலுவான மற்றும் தீவிரமான கொள்கைகளே காரணம். தமிழகத்தில் ஸ்டார்ட்அப் சூழலை ஊக்குவிக்க, மத்திய அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், தமிழக அரசு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.