வலி நமக்கு மட்டுமல்ல
ச ந்தை சரிவின் போது, முதலீட்டாளர்கள் அனுபவிக்கும் இழப்பு உண்மையில் வலி நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், தற்போதைய நிலைமையில், சந்தையே பலவீனமாக உள்ளது. இதனால், இழப்பு என்பது தனிப்பட்ட முதலீட்டாளரான நமக்கு மட்டுமே ஏற்பட்டது போல எண்ண வேண்டியதில்லை; இத்தகைய சந்தை திருத்த காலங்களில் பதற்றப்படுவதை விட, முதலீட்டு போர்ட்போலியோவை மீளாய்வு செய்வதே முக்கியம். தற்போது, நிப்டி 50 குறியீடு அதன் அனைத்துக்கால உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 9.5 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. ஆனால், சந்தையின் அடித்தளத்தை பார்க்கும்போது நிலைமை வேறுபட்டதாக உள்ளது. ஆயிரக்கணக்கான பங்குகள் தங்களது 52 வார உச்சத்தில் இருந்து 20 முதல் 50 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளன. அதிலும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், சில பங்குகள் 70 முதல் 90 வரை கடுமையான வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன. இது குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன பங்குகளில் அதிகமாக காணப்படுகிறது. இது, சந்தையின் பரவலான பலவீனத்தை காட்டுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் குறுகியகால சந்தை ஏற்ற தாழ்வுகளை பற்றி பதற்றப்படாமல், போர்ட்போலியோவை தரமான நிறுவனங்களுடன் நீண்டகால பார்வையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சந்தை திருத்தங்கள் பல நேரங்களில் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பையும் வழங்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.