அரசு கடனை குறைக்க ஆர்.பி.ஐ., மாஸ்டர் பிளான்
அ ரசுக்கு உடனடியாக இருக்கும் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், வரும் மார்ச் 2ம் தேதி 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிணைய பத்திரங்களை மாற்றியமைப்பதற்கான 'சுவிட்ச்' ஏலத்தை நடத்தப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 'சுவிட்ச்' ஏலம் என்பது, குறுகிய காலத்தில் முதிர்வடைய உள்ள அரசு பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக நீண்ட கால முதிர்வு கொண்ட புதிய பத்திரங்களை வழங்குவதாகும். வரும் 2026- - 27 நிதியாண்டில், கிட்டத்தட்ட 5.47 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்கள் முதிர்வடைய உள்ளன. இந்த சுமையை குறைக்கவே, நடப்பு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட இரண்டு ஏலங்கள் வாயிலாக 84,804 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளது. தற்போதைய ஏலத்தில், 2027ல் முதிர்வடைய உள்ள பத்திரங்களுக்கு பதிலாக, 2032ம் ஆண்டுக்கு பின் முதிர்வடையும் நீண்டகால பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. நடப்பு நிதியாண்டில், அரசின் மொத்த சந்தை கடன் 17.2 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கடன் முதிர்வு காலத்தை தள்ளிப்போட உதவும்.