UPDATED : மார் 19, 2026 01:10 AM | ADDED : மார் 19, 2026 01:09 AM
ம த்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில், 92.89 என்ற புதிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் உடனான மோதலால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது. இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 74,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்ப பெற்றுள்ளனர். இதுதவிர, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை முதன்முறையாக 9.2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. சீன இறக்குமதி செலவு அதிகரிப்பதும் ரூபாய்க்கு கூடுதல் அழுத்தத்தை தருகிறது. வழக்கமாக ரூபாய் மதிப்பு குறையும்போது, ரிசர்வ் வங்கி டாலர்களை விற்று மதிப்பை நிலைப்படுத்தும். ஆனால், தற்போது வங்கிகளிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதாலும், வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதாலும், ரிசர்வ் வங்கி அதிரடியாக சந்தையில் தலையிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு 92.80 முதல் 93.00 வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு “இஸ்ரேல் - ஈரான் மோதலின் தாக்கத்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓராண்டுக்குள் 95ஆக வீழ்ச்சியடையக்கூடும் என்று, 'கோல்ட்மேன் சாக்ஸ்' கணித்துள்ளது. தற்போதைய நிலையில் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தாலும், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்றவை, வருங்காலத்தில் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையை கடுமையாக்கக் கூடும்.”