பங்கு சந்தை நிலவரம்
உலகளாவிய போக்கால் ஏற்றம்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் நல்ல உயர்வுடன் நிறைவு செய்தன. உலகளாவிய சந்தை போக்குகளின் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. ரியல் எஸ்டேட், ஊடகம் மற்றும் வங்கி துறையைச் சேர்ந்த பங்குகளை வாங்குவதில், முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அத்துடன் அமெரிக்கா, சீனாவில் உள்நாட்டு விற்பனை அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது, நான்காம் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை காரணமாக, நேற்றைய வர்த்தகத்தின் போது எழுச்சி காணப்பட்டது. நிப்டி, சென்செக்ஸ் தலா 1.5 சதவீதம் உயர்வுடன் நிறைவு செய்தன. கடந்த இரண்டு நாட்களில் சந்தை உயர்வு கண்டதால் முதலீட்டாளர்கள் 8.67 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டினர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 695 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர். கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.18 சதவீதம் அதிகரித்து, 72.12 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா அதிகரித்து, 86.56 ரூபாயாக இருந்தது.