பெண் பார்க்க வரவழைத்து மோசடிமணமகன் தாயிடம் 21 சவரன் "லபக்
கண்ணூர்:பெண் பார்க்க வாருங்கள் என, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கேரளாவுக்கு வரவழைத்து, மயக்க மருந்து கொடுத்து மணமகனின் தாயிடமிருந்து 21 சவரன் நகைகளை லபக்கிய, மணமகளின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குணபாட்டி கோபால ரெட்டி. மாநில அரசு அதிகாரி. இவரது மனைவி சவுமினி. இவர்களது மகன் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மணமகளை தேடி அவரது தாய், ஆன்- லைனில் மணமக்களை தேடி தரும் நிறுவனத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் ரெட்டி மற்றும் ஸ்ரீகாந்த் ரெட்டி ஆகியோர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.தங்களது சகோதரி கேரள மாநிலம் கண்ணூரில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நீங்கள் அங்கு வந்தால் பெண் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என அன்பொழுக பேசினர். அவர்களது மரியாதையான பேச்சுக்களை கேட்டு மகிழ்ந்த கோபால் ரெட்டி தம்பதியினர் 11ம் தேதி அவர்கள் சொன்னபடி, கண்ணூர் போய் சேர்ந்தனர்.அங்கு அவர்களை மகேஷ் ரெட்டியும், ஸ்ரீகாந்த் ரெட்டியும் வரவேற்று, கண்ணூர் அருகே உள்ள ரிசார்ட்ஸ்க்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். காலையில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நடத்தலாம் என அவர்கள் தெரிவித்ததையடுத்து, அன்றிரவு கோபால ரெட்டியும், அவரது மனைவியும் அங்கு தங்கினர்.
இரவு உணவின்போது, மகேஷூம், ஸ்ரீகாந்த்தும் மயக்க மருந்து கலந்த இனிப்புக்களை வழங்கினர். அவற்றை விரும்பி சாப்பிட்ட அத்தம்பதியினர் அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விட்டனர். காலையில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கோபால் ரெட்டியின் மனைவி அணிந்திருந்த 21 சவரன் நகைகள், விலை மதிப்புள்ள கடிகாரம் காணவில்லை.மேலும், மகேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும், அவர்களது கார் டிரைவரும் மாயமாகி விட்டிருந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெட்கப்பட்ட அவர்கள் வேறு வழியின்றி கண்ணூர் போலீசில் புகார் செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.