உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் மறியல் போராட்டம்: ஸ்தம்பித்தது தெலுங்கானா

ரயில் மறியல் போராட்டம்: ஸ்தம்பித்தது தெலுங்கானா

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானாவில் நடந்து வரும் ரயில் மறியல் போராட்டத்தினால், ரயில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பஸ்கள், ஆட் டோ ரிக்ஷாக்களும் இயக்கப்படாததால், போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தெலுங்கானா பகுதியில், கடந்த 13 நாட்களாக, பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில், பங்கேற்றுள்ளனர். இதனால், 10 மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழுவினர், 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தையும் அறிவித்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் இந்தப் போராட்டம் ஆரம்பமாகும் என, தெரிவிக்கப்பட்டதால், நாட்டின் தென் பகுதியில் இருந்து, வடமாநிலங்களுக்கு, தெலுங்கானா பகுதி வழியாக இயக்கப்படும் 55 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 222 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்கள் தடம் மாற்றி இயக்கப்பட்டன. சில ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அறிவித்தபடி நேற்று ரயில் மறியல் போராட்டம் தொடங்கியுள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதில், பங்கேற்றுள்ளனர். தெலுங்கானா பகுதியின் பல்வேறு இடங்களில், ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக, ஐதராபாத், செகந்திராபாத், காச்சிகுடா, நாம்பள்ளி உள்ளிட்ட பல ரயில்வே ஸ்டேஷன்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. சில இடங்களில், சரக்கு ரயில்கள் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மறியல் போராட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய ரயில்வே இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் கோதண்டராம், பா.ஜ., மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ., ராமாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரயில் மறியல் போராட்டம், வன்முறைகள் ஏதுமின்றி, அமைதியாக நடந்து வருவதாக, ரயில் வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும், போரா ட்டத்தின் காரண மாக, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடு மையாக பாதிக்கப் பட்டுள்ளது.

ஆந்திர அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: 'தெலுங்கானா பகுதியில் நடந்து வரும், பொது வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி, வெங்கட் நாராயணா என்பவர், ஆந்திர ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த ஆந்திர ஐகோர்ட், இதுகுறித்து, ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு, மத்திய அரசு, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் கோதண்டராம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா பகுதி அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சாமி கவுட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ