மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
07-Sep-2024
தங்கவயல்: தங்கவயல் வரசித்தி விநாயகர் கோவிலில், இன்று முதல் 3 நாட்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தங்கவயலில் பழமையான கோவில்களில் முதன்மையான கோவிலாக இருந்து வருவது, ராபர்ட்சன்பேட்டை கணேஷ்புரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில். இந்த கோவிலின் அடையாளத்தை வைத்து தான் இப் பகுதிக்கு 'கணேஷ்புரம்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக, இப்பகுதியினர் கூறுகின்றனர். 500 ஆண்டுகள்
இக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோவிலில் உள்ள வெண்கல மணி, 1887ல் நிறுவப்பட்டு உள்ளது. இங்குள்ள மத்தளம் 100 ஆண்டுகளையும், கோவிலின் கோபுரமும், அகண்ட அரசு மரமும் 200 வயதை காட்டுகிறது.இங்குள்ள முழு முதற்கடவுளான கணபதியை வழிபட்டு சென்றால் எல்லா நன்மையும் கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இப்போதும் உண்டு. இக்கோவிலில் பூஜைகளை செய்து வருபவர் கணேஷ் தீக் ஷித். இவரும், இதே பகுதியில் 61 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இவரது தந்தை ரமேஷ் குருக்கள், தாசில்தாராக இருந்தும், தனது 87 வயது வரை வரசித்தி விநாயகர் கோவிலின் பொறுப்பாளராக இருந்தவர். இவருக்கு முன்பு ரமேஷ் குருக்களின் தந்தை சுப்ரமணிய தீக் ஷித் கோவிலின் பூஜைகளை செய்து வந்தார். இப்படி தலைமுறை தலைமுறையாக, வரசித்தி விநாயகர் கோவிலை முழு ஐதீக முறைப்படி நடத்தி வருகின்றனர். தினசரி பூஜைகள்
இக்கோவில் தினமும் அதிகாலை 5:30 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.இக்கோவிலில் வள்ளி - தெய்வசேனா சமேத சுந்தர சிவசுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், சிவகாமி சமேத நடராஜ பொருமாள், நவக்கிரஹங்கள் சன்னிதிகள் உள்ளன.மாதந்தோறும் சங்கட ஹர சதுர்த்தி, பிரதோஷம், சத்திய நாராயண பூஜை, சஷ்டி, கிருத்திகை, நடராஜர் திருமஞ்சனம், பிரதோஷம் சிறப்பு பூஜைகள்; செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், தைப்பூசம், ஆடி கிருத்திகை, சனி குருப்பெயர்ச்சி விழாக்களும் நடக்கின்றன. மூன்று நாட்கள்
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் கோவிலில் பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை 6:30 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம்; காலை 9:30 மணிக்கு புஷ்ப அலங்காரம், மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம்.நாளை காலை 8:30 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம்; வரும் 9ம் தேதி காலை 9:30 மணிக்கு காலை பூஜை; மாலை 6:00 மணிக்கு சஷ்டி அபிஷேகம் நடக்கிறது.நவராத்திரியை ஒட்டி அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பத்து நாட்களும் தினமும் மாலை 6:00 மணிக்கு அபிஷேகம், மஹா மங்களாரத்தி நடக்கும். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்படும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மேலும் தொடர்புக்கு ஆர்.கணேஷ் தீட்சித், 72597 88856, வாட்ஸாப் 70196 04460 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
07-Sep-2024