அசாம் - பூட்டான் ரயில் பாதை விரிவான திட்ட அறிக்கை தயார்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அசாமில் இருந்து நம் அண்டை நாடான பூட்டானுக்கு ரயில் பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறபட்டவுடன், இது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நம் அண்டை நாடான பூட்டானில், ரயில் பாதைகள் கிடையாது. நம் நாட்டுக்கும், பூட்டானுக்கும் இடையே ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதன்படி அசாமின் கோக்ராஜரில் இருந்து பூட்டானின் கேலப்பு இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.விரைவில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் துவக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் வாயிலாக, இந்தியா - பூட்டான் இடையே வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சி அடைவதுடன், இருதரப்பு உறவு மேலும் வலுவடையும்.இந்த புதிய ரயில் பாதை, 69.04 கி.மீ., துாரமுள்ளது. இதற்கு, 3,500 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜன், குருபாசா, ரூனிகாடா, ஷாலிபுர், தாத்கிரி, கேலப்பு ஆகிய ஆறு புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த ரயில் பாதையில், இரண்டு இடங்களில் மிக நீளமான பாலம், 29 பாலங்கள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன. ஏற்கனவே நில ஆய்வுகள் முடிக்கப்பட்டு, தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுஉள்ளது.இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பூட்டானில் முதல் ரயில் பாதையாக இது இருக்கும். இதைத் தவிர, போடோலாந்து பகுதியில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவும் மேம்படும்.