| ADDED : ஆக 31, 2024 12:08 AM
கோலார்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநில மின் துறை அமைச்சராக இருப்பவர் ஜார்ஜ். இவர், கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், மின் வெட்டு உள்ளிட்ட மின்சார பிரச்னை தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. மைக்கில் அதிகாரிகள் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. அரங்கமே இருண்டது. ஊழியர்கள் அவசரமாக சென்று சரி செய்தபின், மின் இணைப்பு கிடைத்தது. சிறிது நேரம் கழித்து, மின் துறை அமைச்சர் பேசியபோது, மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, மூன்றாவது முறையாகவும் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், 'ஜெனரேட்டரும் செயல்படவில்லை.என்ன தான் நடக்கிறது இங்கு. வேண்டுமென்றே செய்கிறீர்களா' என்று அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார்.பின், ஜார்ஜ் பேசுகையில், “மின் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்திலேயே அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்தி வெளிவரும். மின் தட்டுப்பாட்டால், இந்த பிரச்னை ஏற்படவில்லை.“வேறு பிரச்னையால், மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அறிக்கை கேட்டுள்ளேன். நாங்கள் சமாளித்து கொள்கிறோம். ஊடகத்தினரும் சற்று சமாளித்து கொள்ளுங்கள்,” என்றார்.அமைச்சர் கிளம்பியதும், மின் துறை ஊழியர்களை, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா கடுமையாக கண்டித்தார்.