தாத்ரா - நாகர் ஹவேலியில் நமோ மருத்துவமனை ௵திறப்பு
சில்வாசா: தாத்ரா - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேசத்தில், 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூவில் உள்ள சில்வாசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். இங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சில்வாசாவில், 'நமோ' மருத்துவமனையின் முதல் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். 460 கோடி ரூபாய் செலவில், 450 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, தாத்ரா - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூவில், சுகாதார சேவைகளை வலுப்படுத்தும். இது இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகங்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்கும்.தொடர்ந்து, கிராம சாலைகள், பிற சாலை உட்கட்டமைப்பு, பள்ளிகள், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், பஞ்சாயத்து மற்றும் நிர்வாக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், கழிவுநீர் உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இந்த பயணத்தை முடித்து, குஜராத்தின் சூரத்துக்கு சென்ற பிரதமர் மோடி, சூரத் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை நேற்று மாலை துவக்கி வைத்தார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
சிங்கப்பூர் ஒரு காலத்தில் சில மீனவர்கள் வசிக்கும் தீவாக இருந்தது. ஆனால் அந்நாட்டு குடிமக்களின் கடின உழைப்பால், குறுகிய காலத்திலேயே வளர்ந்த நாடாக மாறியது. அதே போல், தாத்ரா - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூவும் மாறும். வரும் 2050க்குள், 44 கோடி இந்தியர்கள் உடல் பருமனாக இருப்பர் என, அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. உடல் பருமனைக் கட்டுப்படுத்த சமையல் எண்ணெய் பயன்பாட்டை, 10 சதவீதம் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.