| ADDED : ஜூன் 15, 2024 01:39 AM
புதுடில்லி:நகரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள் குறித்த அறிக்கையை அளிக்கும்படி, போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறையிடம் மாநில பொதுப்பணித்துறை அறிக்கை கேட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் இல்லாத தேசிய தலைநகராக மாற்ற என்ன செய்யலாம் என்பது குறித்து டில்லி அரசின் பொதுப் பணித் துறை ஆலோசனை செய்து வருகிறது.கடந்த ஆண்டு, டில்லி காவல்துறை, தேசிய தலைநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் உள்ள 117 இடங்களை கண்டறிந்து, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பட்டியலிட்டது.வடக்கு மண்டலம் அதிகபட்சமாக 27 இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் 22 இடங்களிலும், மத்திய மண்டலத்தில் 21 இடங்களிலும், கிழக்கு மண்டலத்தில் 20 இடங்களிலும் மேற்கு மண்டலத்தில் 19 இடங்களிலும் புதுடில்லி மண்டலத்தில் எட்டு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக பட்டியலிடப்பட்டது.போக்குவரத்து நெரிசலை குறைக்க 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள், உயர்த்தப்பட்ட சாலைகள், சுரங்கப்பாதைகள் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை 10 புதிய திட்டங்களை வகுத்துள்ளது.இதுகுறித்து அத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகரம் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பல்வேறு துறைகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசாருடன் தொடர்பு கொண்டு வருகிறோம். இந்த பிரச்னையில் பல கூட்டங்கள் நடந்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.