உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தரமற்ற குளுக்கோஸ் சப்ளை செய்த நிறுவனம் மீது 4 கிரிமினல் வழக்கு

தரமற்ற குளுக்கோஸ் சப்ளை செய்த நிறுவனம் மீது 4 கிரிமினல் வழக்கு

பெங்களூரு: தரமற்ற ஐ.வி.குளுக்கோஸ் சப்ளை செய்து, பெண்களின் இறப்புக்கு காரணமான நிறுவனத்தின் மீது, நான்கு கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி, அதிகாரிகள் சிபாரிசு செய்துள்ளனர்.பல்லாரியின் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவித்த ஐந்து பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு என்ன காரணம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.காலாவதியான அல்லது தரமற்ற ஐ.வி.குளுக்கோஸ் செலுத்தப்பட்டதே பெண்களின் இறப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது. அதன்பின் இத்தகைய குளுக்கோஸ் பயன்படுத்த, சுகாதாரத்துறையும் தடை விதித்தது. இந்த குளுக்கோஸ் சப்ளை செய்த, மேற்கு வங்க நிறுவனத்தையும், கறுப்புப்பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசித்தது.சில மருத்துவமனைகளில் இதுபோன்ற குளுக்கோஸ் சேகரித்து வைத்திருப்பதும் தெரிந்தது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கே திருப்பி அனுப்புவதாக சுகாதாரத்துறை கூறியிருந்தது.இந்த சம்பவத்துக்கு பின், மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் குழுவினர், கடந்த வாரம் மேற்கு வங்கம் சென்றனர். சம்பந்தபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். ஐ.வி., குளுக்கோசில் விஷத்தன்மை கொண்ட அம்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக, அரசுக்கு விரிவான அறிக்கை அளித்துள்ள அதிகாரிகள், நிறுவனத்தின் மீது, நான்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யும்படி, சிபாரிசு செய்துள்ளனர்.சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஹர்ஷா குப்தா கூறியதாவது:இதற்கு முன்பே ஐ.வி.குளுக்கோஸ் தரமற்றது இல்லை என, தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம், நீதிமன்றத்தை நாடி ஐ.வி.குளுக்கோஸ் பயன்படுத்த தகுதியானது என, அறிக்கை அளித்தது. இதற்கு பின்னரும், மாநிலத்தில் ஆறு பெண்கள் இறந்தனர்.தற்போது மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், மேற்கு வங்கத்துக்கு நேரில் சென்று, ஆய்வு செய்ததில் ஐ.வி.குளுக்கோசில் விஷத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளின் சிபாரிசுபடி, அந்த நிறுவனத்தின் மீது, நான்கு கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இனி மருத்துகளை சப்ளை செய்ய முடியாதபடி, அந்நிறுவனம் கறுப்புப்பட்டியலிலும் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ