உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளத்தில் மூழ்கிய பஞ்சாப் கிராமங்கள் மீட்பு பணியில் ராணுவமும் மும்முரம்

வெள்ளத்தில் மூழ்கிய பஞ்சாப் கிராமங்கள் மீட்பு பணியில் ராணுவமும் மும்முரம்

பதான்கோட்:பஞ்சாப் மாநிலத்தில், தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர். அஜ்னாலா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் படகுகள் வாயிலாக மீட்கப்பட்டு வருவதாக, அமிர்தசரஸ் புறநகர் போலீஸ் எஸ்.பி., மணீந்தர் சிங் கூறினார். ராவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோரப் பகுதிகளில் அமிர்தசரஸ் துணைக் கமிஷனர் ஆணையர் சாக் ஷி சாவ்னி ஆய்வு செய்தார். பதான்கோட்டில், இந்திய - -பாகிஸ்தான் எல்லை அருகே,பல கிராமங்களுக்குள் ராவி ஆற்று வெள்ளம் புகுந்தது. வெள்ளம் புகுந்த சுஜன்பூர், அத்தேபூர் மற்றும் பஹேரி கிராமங்களில் தேசிய மீட்புப் படையினர் மக்களை மீட்டு வருகின்றனர். பதான்கோட் துணைக் கமிஷனர் ஆதித்யா உப்பல், “கிராமங்களுக்குள் ராவி ஆற்று வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவ வீரர்கள் மக்களை உடனுக்குடன் மீட்டு வருகின்றனர். பதான்கோட் மற்றும் கோசாய்பூரில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன,”என்றார். இடைவிடாத கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - -காஷ்மீரின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கொட்டும் கனமழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாங், பக்ரா மற்றும் ரஞ்சித் சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பதான்கோட், குருதாஸ்பூர், பாசில்கா, கபுர்தலா, தரன் தரன், பெரோஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர் மாவட்டங்களிளும் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர். ஹெலிகாப்டர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பகவந்த்மான் நிருபர்களிடம் கூறியதாவது: பல கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலர் தங்கள் வீடுகளின் கூரைகளில் அமர்ந்திருக்கின்றனர். பஞ்சாப் மாநில அரசின் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, நிவாரணப் பணிகளுக்கு என் காரையும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

18 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

பஞ்சாபில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, புதுடில்லி - -கத்ரா வந்தே பாரத், கத்ரா- - சுபேதர்கஞ்ச் எக்ஸ்பிரஸ், உதம்பூர்- - பதான்கோட் எக்ஸ்பிரஸ், கத்ரா- - புதுடில்லி எக்ஸ்பிரஸ், ஜம்முதாவி- - வாரணாசி எக்ஸ்பிரஸ், கத்ரா- - ரிஷிகேஷ் எக்ஸ்பிரஸ் மற்றும் கல்கா - -கத்ரா எக்ஸ்பிரஸ் உட்பட, 18 ரயில்கள் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர் வழங்கிய முதல்வர்

குர்தாஸ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆய்வு செய்தார். அப்போது, பகவந்த்மான் நிருபர்களிடம் கூறியதாவது: பல கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலர் தங்கள் வீடுகளின் கூரைகளில் அமர்ந்திருக்கின்றனர். பஞ்சாப் மாநில அரசின் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, நிவாரணப் பணிகளுக்கு என் காரையும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ