வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சரக்கு வைக்கும் பகுதியில் பழங்கள் அல்லது வாசனை மலர்கள் அதிகளவில் இருந்திருக்கலாம்
சூரத் : குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை, திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தின் சூரத் விமான நிலையத்திலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானம், நேற்று முன்தினம் அதிகாலை 4:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அனைத்து பயணியரும் ஏற்றப்பட்டு புறப்படத் தயாரானபோது, விமானத்தில் சரக்குகள் வைக்கும் அறையின் கதவு பகுதி யில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொய்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, புகையை பயன்படுத்தி, தேனீக்களை விரட்ட அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை விரட்ட முயற்சித்தனர். அப்போது, மேலும் அதிக தேனீக்கள் வந்ததால் அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர்.புகை மற்றும் தண்ணீர் இரண்டையும் பயன்படுத்தி ஒரு மணிநேர தொடர் முயற்சிக்குப் பின், விமானத்தை சூழ்ந்திருந்த தேனீக்கள் விரட்டப்பட்டன. இதன் காரணமாக, சூரத்- - ஜெய்ப்பூர் இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சரக்கு வைக்கும் பகுதியில் பழங்கள் அல்லது வாசனை மலர்கள் அதிகளவில் இருந்திருக்கலாம்