உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரத்தன் டாடா மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

பெலகாவி: தொழில் அதிபர் ரத்தன் டாடா உட்பட ஏழு பேரின் மறைவுக்கு, கர்நாடக சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.கர்நாடக சட்டசபையில் குளிர்கால கூட்ட தொடர் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், தேசிய கீதத்துடன் நேற்று துவங்கியது. பின், அரசியலமைப்பு உறுதி மொழியை சபாநாயகர் காதர் வாசித்தார். அவரை பின்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

யார், யார்?

பின், சமீபத்தில் மரணம் அடைந்த சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் மனோகர் தாசில்தார், தொழில் அதிபர் ரத்தன் டாடா, முன்னாள் மத்திய அமைச்சர் சீனிவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பசவராஜ், லட்சுமி நாராயணன், வெங்கடரெட்டி, கஜ பண்டா நவாஸ் தர்காவின் சுபி துறவி சையத் ஷா குஸ்ரோ உசேனி ஆகிய ஏழு பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, சபாநாயகர் காதர் வாசித்தார்.மனோகர் தாசில்தார் ஹனகல் தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக பணியாற்றிய அனுபவம் உடையவர். இந்த சபையின் துணை சபாநாயகர் ஆகவும், கலால் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

பன்முக திறமை

முன்னாள் மத்திய அமைச்சர் சீனிவாஸ், பன்முக திறமை கொண்டவர். விவசாயி, வக்கீலாக பணியாற்றியது மட்டுமல்லாமல் கவிதை எழுதியதுடன், திரைப்படங்களிலும் நடித்தார். கர்நாடக சட்டசபைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய அரசில் தகவல் மற்றும் ஒலிபரப்பு, எரிசக்தி துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர். ஒப்பற்ற எம்.பி.,யாக திகழ்ந்தவர்.முன்னாள் எம்.எல்.ஏ., பசவராஜ், அரிசிகெரே தொகுதியில் இருந்து 12வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணா குந்தாபூரில் பிறந்தவர். பைந்தூர் தொகுதியிலிருந்து கடந்த 2008 ல் வெற்றி பெற்றவர். முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடா ரெட்டி யாத்கிர் தொகுதியிலிருந்து 2018 ல் சட்டசபைக்கு தேர்வானவர்.

மனிதநேயவாதி

நாட்டின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா 1937ல் பிறந்தார். கடந்த 1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். உலகமயமாக்கல் மற்றும் போட்டியின் சகாப்தத்தை எதிர்கொள்ள இந்திய பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலின் போது, அவரது நிறுவனங்களை மறுசீரமைத்தார். டாடா அறக்கட்டளையில் தீவிரமாக ஈடுபட்டார். அவருக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. அவர் ஒரு சிறந்த மனிதநேயவாதி. வெளிநாடுகளில் இருந்தும் பல விருதுகளை பெற்றுள்ளார். மக்களுக்கு பல சேவைகள் செய்யும் மத கஜபண்டா நவாஸ் தர்கா சுபி துறவி சையத் ஷா குஸ்ரோ உசேனி மரணம் அடைந்துள்ளார்.இவ்வாறு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்து முடித்தார்.இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், அமைச்சர்கள் பரமேஸ்வர், எச்.கே.பாட்டீல் பேசினர். பின், மறைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ