''ஒரு குடும்பத்தையும், அந்த பரம்பரையையும் காப்பாற்றி, அவர்களின் நலன்களுக்கு உதவி செய்வதற்காக மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தை, மிகத் துணிச்சலாக காங்கிரஸ் பலமுறை திருத்தியது. இந்த திருத்தங்கள் எதுவுமே ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக செய்யப்பட்டவை அல்ல,'' என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை துவக்கி வைத்து பேசியதாவது:நம் நாடு 1947ல் சுதந்திரம் பெற்றாலும், முதல் தேர்தல் நடத்தப்பட்ட 1952 வரை, ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அரசு தான் இருந்தது. திருத்தம்
அப்போது, கம்யூனிஸ்ட்களின் 'க்ராஸ் ரோட்ஸ்' மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 'ஆர்கனைசர்' ஆகிய பத்திரிகைகளுக்கு ஆதரவாக, 1950ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை தடுக்கும் வகையில் இடைக்கால அரசு, முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓராண்டுக்குள்ளாகவே, கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்காக, அதில் முதல் திருத்தத்தை இடைக்கால காங்கிரஸ் அரசு செய்தது.காங்., அரசின் முடிவுகளை கேள்வி கேட்கக்கூடாது, அதில் நீதித்துறை தலையிட அனுமதிக்கக் கூடாது என்பதற்காக ஒன்பதாவது அட்டவணை, அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டது.ராஜ்நாராயண் - இந்திரா இடையிலான வழக்கை நீர்த்துப்போக செய்வதற்காகவே, இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போதே இந்திராவுக்காக, 1975ல் அரசியலமைப்பு சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தம் மேற்கொண்டனர்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படுவதை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்றும், பார்லிமென்ட் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தனர்.இவ்வாறு, ஒரு குடும்பம் மற்றும் அதன் பரம்பரையை காப்பாற்றுவதற்கும், அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்வதற்கும், அரசியலமைப்பு சட்டத்தில் தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்டது. லாவகம்
மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அல்லாமல், அதிகாரத்தில் இருக்கும் அந்த குடும்பத்தை வலுப்படுத்துவதற்காகவே இது போன்ற ஒரு நடைமுறையை காங்கிரஸ் லாவகமாக பயன்படுத்தியது.இவ்வாறு அவர் பேசினார்.
'எங்களுக்கு பாடம் நடத்தலாமா?'
ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:நாட்டின் தேசியக்கொடியை வெறுத்தவர்கள், அசோக சக்கரத்தை மறுத்தவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை ஏற்க மறுத்தவர்கள் தான் நீங்கள். அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில், அதை தீ வைத்து எரித்தவர்கள். அம்பேத்கர், நேரு, காந்தி உருவ பொம்மைகளை இதே டில்லி ராம்லீலா மைதானத்தில் தீயிட்டு எரித்து மகிழ்ச்சி அடைந்த நீங்களா, இன்று அரசியலமைப்பு சட்டம் பற்றி எங்களுக்கு பாடம் நடத்துவது?எனக்கும் ஓரளவு படிக்கத் தெரியும். நான் கார்ப்பரேஷன் பள்ளியில் தான் படித்து முடித்தேன். அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, புகழ்பெற்ற டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார். அவரது ஆங்கிலம் நன்றாக இருக்கிறது. ஏன் அவருடைய ஹந்தி கூட நன்றாகத்தான் உள்ளது. ஆனால், அவரது செயல்கள் மட்டும் எனக்கு நல்லபடியாக தெரியவில்லை என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -