புதுடில்லி: பீஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட 98 சதவீத இடங்களில் டெபாசிட் இழந்தது என்பது தெரியவந்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. புதிதாக களத்தில் குதித்த கட்சிக்கு, 18 லட்சத்திற்கும் குறைவான ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது. இது மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 3.44 சதவீதம் ஆகும். அது போட்டியிட்ட 238 இடங்களில் 236 இடங்களில் டெபாசிட் இழந்தது.98 சதவீத இடங்களில் டெபாசிட் இழந்தது அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய தேர்தல் கமிஷனின் தரவுகளின் படி, ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே இரண்டாவது பிடித்திருக்கிறது. 126 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 54 இடங்களில் இந்த கட்சி நோட்டாவை விட குறைவாக ஓட்டுகளை பெற்றுள்ளது. சன்பதியா (37,172) மற்றும் ஜோகிஹாட் (35,354) உள்ளிட்ட இடங்களில் 35,000க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்று ஜன் சுராஜ் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ரகுநாத்பூர் (3,071), அத்ரி (3,177), மானெர் (3,980) உள்ளிட்ட இடங்களில் 3000க்கும் குறைவான ஓட்டுகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.மர்ஹௌராவில் மட்டும் 58,190 ஓட்டுக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்தத் தொகுதியில் ஆர்ஜேடி கட்சி வேட்பாளர் 86,118 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். போட்டியிட்ட மீதமுள்ள 111 இடங்களில், ஜன் சுராஜ் கட்சி நான்காவது இடம் அல்லது அதற்கும் குறைவான இடங்களுக்கு பின் தங்கி உள்ளது. பிப்ராவில், ஜன்சுராஜ் கட்சி 5,519 ஓட்டுக்களை பெற்றது. அதே நேரத்தில் நோட்டா 10,691 ஓட்டுக்களை பெற்றது.பிரசாந்த் கிஷோருக்கு அடுத்து என்ன?
பீஹாரில் தனது மூன்று ஆண்டு பிரசாரத்தின் போது, மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் பயணம் செய்து, ஜாதி அரசியலை ஒழித்து, வேலைவாய்ப்புகளை கொண்டு வருவதாக பிரசாந்த் கிஷோர் உறுதியளித்தபோது, நிறைய வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் ஏதும் கை கொடுக்கவில்லை.இந்த முறை போட்டியிட்ட 101 இடங்களில் 89 இடங்களை பாஜ வென்றது. தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் அரசு, 1.25 கோடி பெண் வாக்காளர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரவு வைத்தது. இது தான் தேஜ கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.