இன்ஜினியர் தற்கொலை ஓலா நிறுவனர் மீது வழக்கு
பெங்களூரு: சம்பள பிரச்னையில், இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு, சுப்பிரமணியபுரா பகுதியில் வசித்தவர் அரவிந்த், 41. 'ஓலா' நிறுவனத்தின், 'எலக்ட்ரிக்' இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு பிரிவில் இன்ஜினியராக பணிபுரிந்தார். கடந்த மாதம் 28ம் தேதி, வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். சுப்பிரமணியபுரா போலீசாரின், முதற்கட்ட விசாரணையில் அரவிந்த் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி, அரவிந்தின் வங்கிக் கணக்கிற்கு, 'ஓலா' நிறுவனத்தில் இருந்து, 17.46 லட்சம் ரூபாய் வந்தது. இதுபற்றி நிறுவனத்திற்கு சென்று, அரவிந்த் குடும்பத்தினர் கேட்டனர். ஆனால், அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர், அரவிந்தின் அறையை சோதனையிட்ட போது, எட்டு பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், 'ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், இன்ஜினியரிங் பிரிவு தலைமை அதிகாரி சுப்ரத்குமார் தாஸ் ஆகியோர் எனக்கு தொல்லை கொடுத்தனர். சம்பள பணத்தையும் சரியாக வழங்கவில்லை. அவர்களை எதிர்க்க முடியாது என்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன்' என எழுதப்பட்டு இருந்தது. அரவிந்த் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பவிஷ் அகர்வால், சுப்ரத்குமார் தாஸ் ஆகிய இருவர் மீதும், சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.