| ADDED : செப் 08, 2024 02:56 PM
பாட்னா: பீஹாரில், போலி டாக்டர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(15), உடல்நலக்குறைவால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஜித் குமார், சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் யூடியூப் சமூக வலைதளத்தை பார்த்து அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், சிறுவன் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். அதற்குள் சிறுவன் உயிரிழந்தார். டாக்டர் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தப்பிச் சென்றனர்.இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதித்ததும் கிருஷ்ணகுமார் வாந்தி எடுப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறினார். அதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டதும் அவர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை செய்தார். பிறகு, அவர் உயிரிழந்தார். அவர் டாக்டருக்கு படித்தாரா என தெரியவில்லை. அவர் போலி டாக்டர் என எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர். அங்கு ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.