மாணவரிடம் ரூ.2 லட்சம் பறித்த கும்பல் சிக்கியது
புதுடில்லி:சிறப்பாக படித்ததற்காக பெற்ற கல்வி உதவித்தொகை, 2 லட்சம் ரூபாயை, கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணத்தில் முதலீடு செய்ய நினைத்த கல்லுாரி மாணவரிடம் இருந்து, துப்பாக்கி முனையில் பறித்த, ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். துவாரகாவில் உள்ள அரசு கல்லுாரியில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவருக்கு, சிறப்பாக படித்ததற்காக, 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை சமீபத்தில் கிடைத்தது. அந்த பணத்தை, மெய்நிகர் பணத்தில் முதலீடு செய்ய விரும்பிய அந்த மாணவர், டில்லி வந்து, மேற்கு டில்லியின் பஸ்சிம்விஹார் பகுதியில் நண்பர் இருவரை சந்தித்தார். அவர்கள் அளித்த அறிவுரைப்படி, இன்னொரு இடத்திற்கு அவர் காரில் சென்ற போது, காரை சுற்றி வளைத்த, ஏழு பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி, பணத்தை பறித்து தப்பியது. பணத்தை இழந்த அந்த மாணவர், போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட அமித் ஜெயின், 31, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.