| ADDED : ஜூன் 04, 2025 01:59 AM
சண்டிகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நம் நாட்டிற்கு எதிராக நாசவேலை பார்ப்பவர்கள் குறித்த தகவல்களை பாதுகாப்புத்துறை திரட்டி வருகிறது. அதன்படி, நம் அண்டை நாடான பாக்.,கிற்கு உளவு வேலை பார்த்த பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ககன்தீப் சிங் என்பவரை பஞ்சாப் போலீஸ் கைது செய்துஉள்ளது. இவர், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு நம் ராணுவ நடமாட்டம் குறித்த ரகசிய தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். அதே சமயம், தற்போது பாகிஸ்தானில் உள்ள காலிஸ்தான் தீவிர வாதி கோபால் சாவ்லா உடனும் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் லஷ்கர்- - இ - -தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். ககன்தீப் சிங்கிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனில், அவர் நம் உளவுத்துறை பற்றிய முக்கியமான தகவல்களை பாக்., உளவுத்துறையிடம் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசி எண்களும் இருந்தன. அவர்களிடம் இருந்து பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.